July 2026
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,
இறைமைந்தன் இயேசுவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்! இம்மாதத்தில் சீலாவின் திருநாளையும், யாக்கோபின் திருநாளையும் நினைவு கூறுகிறோம். சீலா, பவுலின் இரண்டாவது மிஷனரி பயணம் முதல், அவருடைய ஊழியங்களில் அவருக்கு துணை புரிந்தவர். சிறைச்சாலையில், உட்காவல் அறையில், கால்கள் தொழுமரத்தில் மாட்டி வைக்கப்பட்ட நிலையில், நடுராத்திரியில், வேதனைகள் மத்தியில், பவுலோடு கூட சீலாவும் ஜெபம் பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள். நாமும் நமது துன்பங்கள் மத்தியில் ஜெபம் பண்ணவும், துதிக்கவும், தேவனைப் புகழ்ந்து பாடவும் அழைக்கப்படுகிறோம். இதன் விளைவாக விடுதலையையும் நாம் பெற்றுக் கொள்வோம்!
அப்போஸ்தலனாகிய யாக்கோபு, இயேசுவின் நெருங்கிய மூன்று சீடருள் ஒருவர். யவீருவின் மகள் உயிர் பெற்று எழும்பும் போதும், இயேசுவின் மறுரூப நிகழ்விலும், இயேசுவின் கெத்செமெனே பாடுகளின் போதும், மூன்று சீடருள் ஒருவராக அவரோடு தனித்து இருந்தவர். அன்று இயேசுவோடு நெருங்கி வாழ்ந்த யாக்கோபைப் போல, இன்றும் அவரோடு நெருங்கி வாழ்ந்திட இயேசு நம்மை அழைக்கிறார்!
இம்மாதத்திலும் தேவன் தாமே உங்கள் அனைவரையும் தமது கிருபைக்குள்ளாக பாதுகாப்பாராக!
