கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!
இந்த மாதத்தில், 11-ஆம் தேதி, அப்போஸ்தலர் பர்னபாவின் திருநாளை நினைவு கூறுகிறோம். பர்னபா பிறருக்கு, ஆறுதலை அருளிச் செய்யும் ஆறுதலின் மகனாக விளங்கியவர். தனக்கு உண்டானவற்றை விற்று, ஆண்டவருக்கென அதின் கிரயத்தை அர்ப்பணித்தவர். மேலும், மனம் மாறிய சவுலை அப்போஸ்தலரிடத்தில் தைரியமாக அறிமுகப்படுத்தியவர். பர்னபாவின் சிறந்த குணாதிசயங்கள் நம்மிலும் மலர தேவன் துணை செய்வாராக!
ஆண்டவர் இயேசுவின் வருகையை முன்னறிவித்த யோவான் ஸ்நானகனின் திருநாள் 24-ஆம் தேதி ஆசரிக்கப்படுகின்றது. இன்று நாம் இயேசுவின் இரண்டாம் வருகையை பிறருக்கு அறிவித்திட அனுப்பப்பட்டுள்ளோம். நமது பணியை பரிவுடன் புரிந்திட, பரன் தாமே நம்மை பலப்படுத்துவாராக!
இந்த மாதத்திலும் வருகின்ற 29-ஆம் தேதி பரி. பேதுரு மற்றும் 30-ஆம் தேதி பரி. பவுலின் திருநாளை ஆசரிக்க இருக்கிறோம். பரி. பேதுரு 1 BC-ல் பிறந்ததாக சரித்திரம் கூறுகிறது. இவர் இரத்த சாட்சியாய் மரித்தது AD 64-ல் அல்லது AD 68-ல்.
இவர் மீது தான் ஆதி திருச்சபை கட்டப்பட்டது, சாதாரண மீனவராய் இருந்தாலும், இயேசுவால் அழைக்கப்பட்ட அவரது நெருங்கிய சீடர். துடிப்பாக இவர் பலமுறை பேசுவதை சுவிசேஷம் நமக்கு அறிவித்தாலும், நாணல் புல் போன்று இருந்த அவரை கற்பாறை ஆக்கினார் இயேசு. மூன்று முறை மறுதலித்தாலும் பின்னர் இயேசுவின் அன்பால் தொடப்பட்டு, இறுதியில் இரத்த சாட்சியாய் மரிக்க தன்னை ஒப்புக் கொடுக்கிறார்.
பவுல், தரிசு பட்டணத்தில் AD 5-ல் பிறந்தவர், கடைசியாக AD 64/65-ல் இரத்த சாட்சியாக இயேசுவுக்காக மரித்தார். பவுல் புதிய ஏற்பாட்டின் அநேக நிரூபங்களை எழுதி உள்ளார். ஆரம்பத்தில் திருச்சபையை துன்புறுத்தினாலும் பின்னர், திருச்சபைக்காக துன்பப்படுவதற்காக தன் வாழ்வை அர்ப்பணிக்கிறார். இவர் அப்போஸ்தலனாக இருந்து புறஜாதியார் மத்தியில் ஊழியம் செய்து அநேக சபைகளை ஸ்தாபித்தார். இவர் சிறந்த கல்விமான். கமாலியேலின் பாதத்தருகே அமர்ந்து கற்றவர். இவர் அநேகரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இயேசுவை முக முகமாய் தரிசித்தவர், பரலோக தரிசனங்களைக் கண்டவர். அற்புதங்கள், அடையாளங்கள் பல இவர் மூலமாய் நடைபெற்றன.
நாமும் பேதுருவை போல, பவுலை போல வாழ தேவன் கிருபை செய்வாராக!
கர்த்தர் தாமே இந்த கல்வியாண்டிலும் உங்களை கரம் பிடித்து நடத்துவாராக!
